ஈரான் தேர்தலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி, இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஈரான் அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று காலை உடன் நிறைவு பெற்றது. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரங்கள் நிறைவுபெற வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஈரான் மக்கள் தங்கள் நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர்.
சுமார் 63 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 3.30மணி) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
ஈரான் நாட்டில் 56 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இந்திய நேரப்படி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் சுமார் 1636 பேர் போட்டியிட பதிவு செய்து இருந்தனர். இதில் 137 பேர் பெண்கள். 1499 பேர் ஆண்கள். இளம் வேட்பாளர்கள் 18 பேர். முதிய வேட்பாளர்கள் 92 பேர். பதிவு செய்த 1636 வேட்பாளர்களில் 4 பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும் அதில் இருந்து இருவர் பின்வாங்கி விட்டனர். இறுதியாக தற்போதைய அதிபர் ருஹானி, இப்ராஹிம் ரெயிசி ஆகிய இருவர் மட்டும் களத்தில் உள்ளனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
அதிபர் தேர்தலுடன், உள்ளாட்சி தேர்தலுக்கும் மக்கள் வாக்களிக்கின்றனர். இதில் நகர மற்றும் கிராமங்களுக்கான கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஈரானில் நடைபெறும் தேர்தல் என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.