தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காது எனவும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னான நிலமைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவியலானர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, “தமிழ்தேசிய கூட்டமைப்பு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் பல கட்சிகள் அறுதி பெரும்பான்மையை எடுக்க தவறியிருக்கின்றது.
இந்நிலையில் எவருடனாவது கூட்டிணைந்தே தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கொள்கை இல்லாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.மக்களுடைய ஆணைக்கு தலைவணங்கி தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும்.
சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். அதேபோல் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளியாகவும் இருக்காது, பகையாளியாகவும் இருக்காது.
எனவே இருதரப்பும் ஒருவருக்கொருவர் தடையாக இருக்காமல் இருக்கவேண்டும்” என கேட்டு கொண்டார்.