எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் குற்றங்களின் காரணமாகத்தான் நாம் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றோம்.
இந்த அரசும் அவ்வாறான குற்றங்களைச் செய்யவேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், இந்த அரசின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இந்த அரசு எமது குற்றங்களை விஞ்சிவிடும்போல் தெரிகின்றது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே ஊழல், மோசடி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக அது தொடர்கின்றது. இது இந்த அரசை எங்கோ கொண்டுபோய் நிறுத்தப்போகின்றது?
ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்குக் கிடைத்தமை சந்தோசமான விடயம்தான். ஆனால், இந்த அரசின் பிழையான பொருளாதாரக் கொள்கையால் ஜி.எஸ்.பி. பிளஸின் ஒட்டுமொத்த பயனையும் எம்மால் அனுபவிக்கமுடியாமல் போகும்.
வங்கிக் கடன் வட்டி வீதம் 15ஆக இருப்பதால் கடனைப் பெற்று புதிய தொழிற்சாலையை நிறுவமுடியாத நிலை உள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கச்செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இந்த அரசிடம் இல்லை. இந்நிலையில், இந்த நாட்டை இந்த அரசால் ஒருபோதும் முன்னேற்ற முடியாது” – என்று தெரிவித்துள்ளார்.