பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கோர்ட் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது.
பனாமா கேட்’ என அழைக்கப்படுகிற இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.
பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் தொடுத்த வழக்கை நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது, இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கோர்ட் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார். நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜராவதையொட்டி இஸ்லாமாபாத் நகரில் உள்ள நீதி அகடாமிக்கு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு கிளம்புவதற்கு முன்பாக தனது டுவிட்டரில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் புகைப்படத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு புலனாய்வுக் குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் ஆஜராகும் செய்தி பாகிஸ்தான் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.