நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல கிழக்கு மாகாணத்திலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கின் புதிய ஆளுநர் நியமனமானது இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வழிவகுக்குமென நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கின் நிரந்த அமைதிக்கும் ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்கும் புதிய ஆளுநருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள கிழக்கு முதல்வர், ஆளுநரும் மாகாண சபையும் இணைந்து சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை இலகுவாக கட்டியெழுப்பலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக காணப்படும் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் முழுமையான அபிவிருத்தி அடையாமை, காணாமல் போனோர் பிரச்சினை, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டோரின் பிரச்சினை போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் பயணத்தில் புதிய ஆளுநர் உறுதுணையாக இருப்பாரென எதிர்பார்ப்பதாகவும் கிழக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.