வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவில் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.7 ஏக்கர் நிலப்பகுதி நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காணி விடுவிப்பதற்கான உறுதிப்பத்திரத்தை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி யாழ் அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தார்.
இந்தநிலையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இடங்களில் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.