மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக இறை நம்பிக்கையுடனும், இறை சிந்தனையுடனும் வாழ்வதற்கும்,எந்த ஒரு மதத்தின் சின்னங்களை உடைத்து சேதப்படுத்துவதற்கும் யாரும் அனுமதிக்க கூடாது என மன்னார் மாவட்ட அற நெறி பாடசாலை இணையத்தின் தலைவர் மஹாதர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று(17) திங்கட்கிழமை இரவு பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டமை
தொடர்பிலும் மக்கள் மத்தியில் அமைதியினை நிலை நாட்டும் வகையிலும் மன்னார் உப்புக்குளம் அம்மன் ஆலையத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னார்-யாழ் பிரதான வீதி தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை மற்றும்,நாயாற்று வழி, செம்மண் தீவு ஆகிய பகுதிகளில் உள்ள பிள்ளையார் சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளமை மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக பல்வேறு பட்ட சிலை உடைப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.
குறித்த நடவடிக்கைகளை தடுப்பதற்கோ அல்லது குறித்த செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கோ இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் இது வரை எமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
மூன்று இடங்களிலே பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பட்ட தரப்பினர் எங்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
வெளிமாவட்டங்களில் உள்ள பல்வேறு இந்து அமைப்புக்களும் குறித்த சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக உள்ளனர்.
எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம் பெறக்கூடாது.
ஆலய வழிபாடுகளுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்துகின்ற செயல்கள் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எங்களுடைய மாவட்டத்தில் மக்கள் தொடர்ச்சியாக இறை நம்பிக்கையுடனும்,இறை சிந்தனையுடனும் வாழ்வதற்கும்,எந்த ஒரு மதத்தின் சின்னங்களை உடைத்து சேதப்படுத்துவதற்கும் யாரும் அனுமதிக்க கூடாது.என தெரிவித்தார்.
குறித்த அவசர கலந்துரையாடலில் இந்து மகா சபை முக்கியஸ்தர் எஸ்.பிரிந்தாவனநாதன்,இந்து குருமார் பேரவைத்தலைவர் கருனாநந்த குருக்கள், மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் செயலாளர் தேசகீர்த்தி மனே.ஐங்கரசர்மா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




