ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்ரீமாவட்ட நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியுள்ளார்.
இதில் பொலிஸ் மா அதிபருடன் கோட்டை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் மனநலக் கோளாறு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.