நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினம் தீர்மானிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அன்றைய தினம் எதிரணி தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணை நாடாளுமன்ற விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் திகதி, வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்து.
மேலும், இதுதொடர்பில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, நாளை மறுதினம் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இப்பிரேரணையின் பின்னணி மற்றும் இதன் உண்மையான நோக்கம் தொடர்பில் ஆராயவேண்டியுள்ளதாகவும் இதற்காக புதன்கிழமை ஒருங்கிணைந்த எதிரணியின் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளதுடன், நாட்டை அபிவிருத்தி பாதையின் கீழ் கொண்டுசெல்ல வேண்டுமென்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.