நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
எனவே இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
இம்மாதம் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த விடயம் குறித்த ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை சமர்பிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் பிற்பகல்1 – 7.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துகொள்ளுமாறு கோருவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கருஜய சூரியவுக்கு நேற்று கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த தாக்குதல்களால் உள்நாட்டு,வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடங்களாக சுமார் 300 பேர் வரையில் கொள்ளப்பட்டும்,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.
அதே வேளை நாட்டிற்கு கூடியளவில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை இதனால் பாரிய பின்னவடைந்துள்ளது. இதனால் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.
இதே போன்று தினசரி ஊதியத்தை கொண்டு வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீடுகளும் கேள்விக்குறியாகியுள்ளன.
எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு இம்மாதம் 7 ஆம் திகதி கூடவுள்ள பாராளுன்ற அமர்வில் மாலை 5.30 தொடக்கம் 7.30 மணி வரை இடம்பெறவுள்ள ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை அன்றைய தினம் பிற்பகல் 1 மணி தொடக்கம் 7.30 மணி வரை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.