உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி – மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தை கடத்தலாம் என ஜனாதிபதி கருதுவதாக பேசப்படுகிறது.
தற்காலிக பொறுப்பு அரசாங்கம் அல்ல பல்கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி நாடாளுமன்றத் தேர்தல் வரை காலத்தை கடத்திச் செல்ல ஜனாதிபதி தயாராக வருவதாகவும் அதனடிப்படையிலான செய்திகளை உருவாக்குமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அரச அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக பொறுப்பு அரசாங்கமோ அல்லது பல் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் மகிந்த ராஜபக்சவே பிரதமராக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு எவருக்கும் பிரதமர் பதவியை வழங்குவதில்லை என ஜனாதிபதி சிறிசேன இணங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பொது கூட்டணியின் கீழ் போட்டியிட ஜனாதிபதியின் தரப்புக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அந்த பிரதானி குறிப்பிட்டுள்ளார்.