கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம். இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன விஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரின் மீதும் கொலைக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலேசிய தலைநகருக்கு வெளியே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற வளாகம் முழுக்க சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




