வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஒரு புத்திசாலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிம் ஜொங் உன் மிக இளவயதிலேயே பாரிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளதாகவும் ஏனைய தலைவர்களுடன் சரிசமமாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “கிம் புத்திசாலி என மக்கள் தெரிவிக்கின்றனர். அவருடைய தந்தை உயிரிழக்கும் போது கிம்மிற்கு 26 அல்லது 27 வயதிருக்கும். இளவயதானாலும் அவர் தளபதிகள் மற்றும் ஏனையோருடன் விவேகமாக செயலாற்றுகிறார். கிம் பதவியேற்பதை தட்டிக்கழிக்க பலர் முயற்சி செய்த போதும் அவர் அவற்றை புறந்தள்ளி வெற்றிகரமாக பதவியேற்றார்” என தெரிவித்தார்.
வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனை தோல்வியை சந்தித்துள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.