Tuesday , June 24 2025
Home / முக்கிய செய்திகள் / அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்

அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்

இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என இராணுவத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களது காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தனியார் காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதனை முதன்மையாகக் கொண்டே தாம் செயற்பட்டு வருவதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அரச காணிகளில் பொதுமக்கள் தேவைக்காக இருக்கின்ற சில பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை, முக்கியத்துவத்தின் அடிப்படையில் நிரல்படுத்திக் கொடுத்தால் அதற்கேற்ப காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பரிசீலனை செய்ய தயாராக உள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என்றும் இராணுவத்தினர் உறுதியளித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி இரணைமடுவை சுற்றியுள்ள 2 ஆயிரத்து 439 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர். ஏற்கனவே 24 ஆயிரம் ஏக்கர் காணி இராணுவத்தினின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது வெறும் 783 ஏக்கர் காணி மாத்திரமே தம்வசமுள்ளதாகவும் அதனையும், படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், முதற்கட்டமாக உடனடியாக 100 ஏக்கர்வரை விடுவிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv