யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர (வயது – 51) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவர் ஆபத்தான கட்டத்தில் நேற்று மாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரது பிஸ்டலைப் பறித்தே தாக்குதல்தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். வலது வயிற்றுப்பகுதியால் உட்புகுந்த துப்பாக்கிச் சன்னம் இடது வயிற்றுப் பக்கத்தால் வெளியேறியுள்ளது. இதனால் நுரையீரலில் பாதிப்பும், குருதிக்கசிவும் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு உடனடியாகவே நேற்று மாலை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிறப்பு வைத்தியர்கள் குழாமின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அதிக குருதிப்போக்குக் காரணமாக இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஹேமச்சந்திர உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
சிலாபத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர, நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 வருடங்களாக மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியுள்ளார். அதேவேளை, இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
எஸ்.ஐயாக
பதவி உயர்வு
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் விமலச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றார். அவருக்குத் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ளது.
மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.