ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகள் காலதாமதம் இன்றி நிறைவேற்றப்படுவதுடன், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையினையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கான போதியளவு கால அவகாசம் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.