ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை கைப்பற்றிய துருக்கி அரசின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஆளும் பஷார் அல் ஆஸாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவை அளித்து வருகின்றன. மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் சிரியாவின் தெற்கே துருக்கி நாட்டு எல்லையோரம் உள்ள சில நகரங்களை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இங்கிருந்தவாறு துருக்கி நாட்டினுள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தங்களது நாட்டின் எல்லைப்பகுதியில் முகாமிட்டுள்ள அவர்களை ஒடுக்குவதற்காக துருக்கி ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், துருக்கி ராணுவ உதவியுடன் சிரிய கிளர்ச்சியாளர்கள் தெற்கு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் வசமிருந்த மான்பிஜ் நகரை கைப்பற்றியுள்ளனர். இந்த தகவலை துருக்கி அதிபர் எர்டோகன் அரசுத் தொலைக்காட்சியில் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான புதிய முன்னேற்ற நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும், சிரியாவின் தெற்கு பகுதியை முழுமையாக ஐ.எஸ் அமைப்பினரிடம் இருந்து மீட்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.