பிரதமர் நவாஸ்செரீப்புக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை சம்பவங்களை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த 2014-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சியும், மத போதகர் தஹிருல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சியும் போராட்டம் நடத்தினர்.
பல நாட்களாக தொடர்ந்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. டி.வி. நிலையம் மீது தாக்குதல் நடத்தி சூறையாடப்பட்டது.
வன்முறை சம்பவங்களை தூண்டியதாக அந்த 2 கட்சிகள் மீது இஸ்லாமாபாத் தீவிரவாத ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நேரில் ஆஜராகும்படி இம்ரான்கான், காத்ரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து இம்ரான்கான் மற்றும் காத்ரியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தும்படி சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.