மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழு ஒன்று நேற்றும், இன்றும் கொழும்பில் நடத்திய இணைக்குழுக் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஸ்ரீலங்கா சித்திரவதை உள்ளிட்ட கரிசனைக்குரிய விடயங்களில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஸ்ரீலங்கா இணைக் ஆணைக்குழுவின் கீழ் நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு, மனித உரிமை குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்றும் நேற்று முன்தினமும் கொழும்பில் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பங்கேற்ற அதன் வெளிவிவகார நடவடிக்கைச் சேவைகளின் அதன் ஆசிய-பசுபிக் திணைக்களத்திற்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழு, இந்த விஜயத்தின்போது ஸ்ரீலங்கா பிரதமரையும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து மனித உரிமை நிலைமைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பிரதியீடாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியதன் அவசியம் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், காணிவிடுப்பு மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட கருத்துச் சுதந்திரத்தினைத் தொடர்ந்தும் பேணுவது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாகவும், சித்திரவதை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது வலுயுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்ரீலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச் சலுகையை மீளவும் ஸ்ரீலங்காவிற்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஆணைக்குழு கடந்த ஜனவரி மாத முற்பகுதியில் தீர்மானித்திருக்கிறது.
இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வருவதற்கு நான்கு மாதங்கள் உள்ளன என்றும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக காத்திரமான கருத்துக்கள், பரிந்துரைகள் இருந்தால் அவற்றினை முன்வைப்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய ஆணைக்குழுவும் இந்த நான்கு மாதங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜீ.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையினை பெற்றுக்கொள்ளவேண்டுமாயின், ஸ்ரீலங்கா மனித உரிமை நிலைகளில் காத்திரமான முன்னேற்றத்தினை அடையவேண்டும் ஐரோப்பிய ஒன்றியக் குழு மீண்டும் இந்தச் சந்திப்புக்களின்போது வலியுறுத்தியிருக்கிறது.
இதேவேளை, ஸ்ரீலங்காவின் புதிய அரசு வலிந்து காணாமல் ஆக்கப்படுவதனைத் தடுக்கும் சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டமை, தகவலறியும் சட்டத்தினை நிறைவேற்றியமை, காணாமற்போனோர் அலுவலகத்திற்கான சட்டத்தினை நிறைவேற்றியமை மற்றும் நல்லிணக்கம் குறித்து எடுக்கப்பட்ட அடையாள நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியக் நடவடிக்கைக் குழு வரவேற்றுள்ளது.