பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என தனியார் ஊடகம் ஒன்று தகவலை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது.
இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜன பெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மஹிந்த ராஜபக்ச தனது முடிவை தெரிவிப்பார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன் கிழமை சிங்கப்பூரிலிருந்து மருத்துவசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பினார்.
அவரை வரவேற்பதற்கான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்ய மஹிந்த ராஜபக்ச விரும்பினார்.
இன்னமும் கோத்தாபய குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகததன் காரணமாகவே அவரது வருகைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் நிகழ்வினை பெருமளவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோத்தாபய ராஜபக்சவை களனி விகாரைக்கு பேரணியாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்சவை அனுராதபுரம் மகாபோதி விகாரைக்கு வாகனப்பேரணியாக அழைத்து செல்வதற்கான திட்டங்களும் காணப்படுகின்றன, அதன் பின்னர் அவர் கண்டிக்கும் செல்வார் என தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.