வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு எமக்குண்டு என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆராயும் வகையில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அங்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
புத்தாண்டில் வடக்கிற்கான முதலாவது விஜயமாக அவரது இன்றைய விஜயம் அமைந்துள்ளது.முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரி.கேதீஸ்வரன் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துக் கொண்டார்.குறித்த கூட்டத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான உபகரணங்களையும் முன்னாள் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.