“மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புப் பற்றிப் பேப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளன.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாணசபை தேர்தலைப் பிற்போடுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்பட வேண்டும். அந்த அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்குத் தயாராகிவிட்டன.
வடமத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், தேர்தலைப் பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது
தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தியடைந்த நிலையில் இருக்கின்றன. நாளைமறுதினம் (இன்று) திங்கட்கிழமை இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதுதவிர, வட்டாரமுறை ரீதியிலான தேர்தல் முறை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
எங்களுடைய நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் 70:30 என்றிருந்த வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதற்கான திருத்தம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
60% வட்டாரம் மற்றும் 40% விகிதாசரம் என்ற ரீதியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் எல்லை நிர்ணயத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. தேர்தலொன்று நடைபெறுமானால் அதற்கு முன் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவாதம் ஒன்றைத் தரவேண்டுமென பிரதமரிட ம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலை வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு முகம் கொடுக்க என்றும் தயாராகவே இருக்கின்றது. வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தொடர்பில் தேசியக் கட்சிகள் அச்சம் கொள்கின்றன. ஆனால், கிழக்கு மாகாண சபையைப் பெறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலை எதிர்கொள்ள என்றும் தயாராகவே இருக்கின்றன.
இதுதவிர, தேர்தலில் பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீடு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போதே ஆயத்தங்களைச் செய்துகொண்டு வருகின்றது. அதுபோல கட்சியின் மத்திய குழுக்கள் விரைவில் வட்டார ரீதியில் அமைக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை அந்தந்த அமைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன வாரிசுரிமை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றன. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாரிசுரிமைக்கு குழிபறித்த கட்சி என்று சொல்லாம். இது பாமர மக்களின் கட்சி.
அமைச்சர் பதவி இருந்தால் மட்டும்தான் சிலரின் கட்சிகள் உயியோடு இருக்கும். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவியைத் தூக்கியெறிந்த காலங்களில்தான் அபாரமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் அவருடன் நன்றாக அனுபவித்துவிட்டு, முஸ்லிம் சமூகத்துக்காக தங்கள் கட்சி வெளியேறுகின்றது எனச் சொல்லிக்கொண்டு ஓடி வந்தவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிலைச் சின்னத்தில் மட்டுமே களமிறங்க வேண்டும் என்று அப்போது சண்டை பிடித்தனர். ஆனால், நாங்கள் தூக்குக் கயிற்றில் தூங்கினாலும் வெற்றிலைச் சின்னத்தில் கேட்கமாட்டோம் என்று அடித்துக்கூறிவிட்டோம்” – என்றார்.