இலங்கை சிறைச்சாலைகளில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்குரிய ஏற்பாடுகளை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு செய்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“அரசியல் கைதிகளான நிமலருபன், டில்ருக்ஷன் ஆகிய இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளானவாறு 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். இவர்களுடைய 5ஆம் ஆண்டு நினைவேந்தலும், இதுவரை கொல்லப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளினதும் நினைவேந்தலும் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அனுஷ்டிப்பதற்கு அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
அரசியல் கைதிகள் இல்லையென அரசு கூறுவதோடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இவர்களை விடுதலைசெய்யமாட்டோம் என நீதிமன்றுக்கு சவால் விட்டுள்ளார்.
இதனைக் கண்டித்தும், அரசு அரசியல் தீர்மானமெடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், நினைவேந்தல் மற்றும் போராட்டத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்புடன், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரச செயற்பாட்டுக் குழு, தமிழ் மக்களின் வாழ்வுக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பன இணைந்து நடத்துகின்றன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஆர்வமுள்ளோரின் பிரச்சினைத் தீர்வுகளில் களத்தில் நிற்போரும் ஆதரவு சக்திகளும் இணைந்து குரலெழுப்ப ஒன்றுதிரளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” – என்றுள்ளது.