வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில், எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அரசாங்கத்திற்குத் தேவையான வாக்குகள் கிடைக்கும் என்பதே உண்மை எனவும் ஷாந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.