ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானே.
எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்க மாட்டார்கள் என மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிடும்போதே கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானே.
எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள். வீண் வதந்திகளை எவரும் நம்பவே வேண்டாம்.
வடக்கு – கிழக்கு – மலையகம் என நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்.
என்னைத் தமிழ் பேசும் மக்களின் எதிரியாகக் சித்திரித்துக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள்.
தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ஷ குடும்பம்.
இப்படிப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று குறித்த அரசியல் வாதிகள் கண்டபடி விமர்சிக்கின்றார்கள்.
நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம். எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து அரச தலைவர் தேர்தலில் நான் வெல்வது உறுதி.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாது காவலனாக – நல்லதொரு தலைவனாக நான் இருப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.