இங்கிலாந்து அரண்மனையில் நடந்த கலாச்சார விழா
இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் நடந்த கலாச்சார விழாவின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத், பரதநாட்டியத்துக்கு அபிநயம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் கலாச்சார அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார நடனங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது பிரபல நடன கலைஞர் அருனிமா குமார் மற்றும் அவரது குழுவினர் பரதநாட்டிய நடனம் ஆடியுள்ளார். இதனைக் கண்ட ராணி எலிசபெத், அருனிமா குமாரிடம் பரதநாட்டிய நடனத்தில் இடம் பெறும் கையால் அபிநயம் செய்யும் முறையை கேட்டறிந்து, அபிநயத்தை தானும் முயற்சி செய்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த கலாச்சார விழாவில் 90 வயதான இங்கிலாந்து ராணி, டியூக் ஆப் எடின்பர்க், இளவரசர் பிலிப், மற்றும் பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




