அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை மறுதினம் இது விடயமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் கிளை பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது. இம்முயற்சிகள் தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும்.
மக்கள் விரும்பும் தீர்வை பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.
ஆனால், எமது மக்கள் விரும்பாத மக்களுக்கு நன்மை அளிக்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.