கொரிய தீபகற்ப எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க தென்கொரியாவின் முப்படைகளும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
வடகொரியா விவகாரத்தில் சீனா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. “வடகொரியா மீது அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் தொடுத்தால் அதனை தடுப்போம். ஒருவேளை அமெரிக்கா, தென்கொரியாவை வடகொரியா தாக்கினால் நடுநிலை வகிப்போம்” என்று சீன அரசு அண்மையில் தெரிவித்தது.
வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளை சீனா கண்டித்து வருகிறது. அதேநேரம் தென்கொரியாவில் அமெரிக்க போர்க் கப்பல்கள், அதிநவீன ஆயுதங்கள் குவிக்கப்படுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனம் தென்கொரியாவில் நிறுவப்பட்டதை கண்டித்து கடந்த மே மாதம் சீன ராணுவம் புதிய வகை ஏவுகணை சோதனையை நடத்தியது.
தற்போது சீனா, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் போகாய் வளைகுடா பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வழக்கமான போர் பயிற்சி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய போர் பதற்றத்தை கருத்திற் கொண்டு சீன ராணுவம் தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=lsUG5_DuWTQ