முல்லைத்தீவு – தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் புதையல் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும், பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடையங்களையும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.
இந் நிலையிலேயே குறித்த இடத்தில் சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில்,
கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம்.
அப் பகுதியிலிருந்து ஒருசோடி பாதணியை மீட்டோம். எனினும் அப் பகுதியில் சிறுவன் எவரும் காணாமல் போனதாக எமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை.
அத்துடன் அப் பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.