தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், நேற்று மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.
சென்னை நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. பிற்பகலில் சற்று ஓய்ந்து இருந்த மழை மாலையில் வெளுத்து வாங்கியது. இரவிலும் மழை நீடித்தது.
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (செவ் வாய்க்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக செவ்வாய்க் கிழமை (இன்று) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்.
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். மேலும் அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நவம்பர் 1-ந் தேதி (நாளை) மழை சற்று குறைந்து காணப்படும். அதன் பிறகு மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 1-ந் தேதிக்கு பிறகு 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். இப்போதைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாகத்தான் மழை பெய்கிறது.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை நகரில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக் கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகை, விழுப் புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என்றும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்து உள்ளார்.