பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல் சுற்று முடிவில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச்சே(குடியரசை நோக்கி நகர்வு) என்ற கட்சியின் தலைவரான மேக்ரான் அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் 577 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் சுற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 49 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதில் மேக்ரானின் கட்சியும், அதன் கூட்டணியான ஜனநாயக இயக்கமும் சேர்ந்து 32.32 சதவீத ஓட்டுகளை பெற்றன. குடியரசு கட்சிக்கு 21.56 சதவீதமும், தேசிய முன்னணிக்கு 13.20 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன. ஏற்கனவே ஆட்சியில் இருந்த சோசலிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தன.
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீத ஓட்டுகளை பெறுபவர்கள் மட்டுமே எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். 2-வது சுற்று தேர்தலில், முதல் சுற்றில் குறைந்த ஓட்டுகள் பெற்ற வேட்பாளர்கள் வெளியேற்றப்பட்டு முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மட்டும் போட்டியிடுவர்.
தற்போது முதல் சுற்றில் பெரும்பாலான கட்சி வேட்பாளர்களுக்கு 50 சதவீத ஓட்டுகள் கிடைக்காததால் 2-ம் சுற்று தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. முதல்சுற்றின் அடிப்படையில் இந்த தேர்தலில் அதிபர் மேக்ரானின் கூட்டணிக்கு 435, குடியரசு கட்சிக்கு 130, தேசிய முன்னணிக்கு 12 இடங்களும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மெஜாரிட்டிக்கு 289 இடங்கள் போதுமானது.