இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதற்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதற்கு பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்தது.
இதனால் அங்கு போர் பதட்டம் நிலவியது. கடந்த ஆகஸ்டு 28-ந்தேதிவரை அதாவது 70 நாட்கள் இந்த நிலை நீடித்தது. இந்தியா- சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர். ஆனால் இரு தரப்பிலும் எந்தவிதமான விளக்கமும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்ட டோக்லாம் பகுதியில் மீண்டும் ரோடு போடும் பணியை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது. டோக்லாமில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் ரோட்டை விரிவுபடுத்தும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
அதற்கான பாதுகாப்பு பணியை 500 சீன வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் இந்தியா- சீனா இடையே மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோயா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டோக்லாமில் சும்பி பள்ளத் தாக்கில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருதரப்பு ராணுவத்தினரிடையே மோதல்- கைகலப்பு போன்ற சம்பவங்கள் இல்லை. ஆனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. அப்பகுதியில் இருந்து சீனா ராணுவ வீரர்களை வாபஸ் பெரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.