எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம்
எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குற்றத்திற்காக எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், முஹம்மது அன்வர் அல் சடத். எகிப்து முன்னாள் அதிபர் அன்வர் அல் சடத்தின் மருமகனான இவர், எகிப்து பாராளுமன்றத்தை வெளிநாட்டு அமைப்புகளுக்கு இணையாக ஒப்பிட்டு சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் பேட்டியளித்த முஹம்மது அன்வர் அல் சடத், எகிப்திய மக்கள் கஷ்டமான காலகட்டத்தை சந்தித்து வரும்வேளையில் பாராளுமன்ற சபாநாயகரும், இரு துணை சபாநாயகர்களும் தலா ஒருகோடி அமெரிக்க டாலர்கள் விலை மதிப்புள்ள ஆடம்பர வெளிநாட்டு கார்களை வாங்கியது தொடர்பாக மோசமாக விமர்சித்து பேசினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் பாராளுமன்றத்தின் மனித உரிமை மீறல் கண்காணிப்பு குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு எகிப்து முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்கை பதவியை விட்டு இறக்குவதற்காக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதை இவர் வெளிப்படையாகவே எதிர்த்து வந்தார்.
மேலும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த வேளைகளில் எகிப்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்மட்ட குழுவினர் எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளையும் இவர் மோசமாக கண்டித்தார்.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு மத்தியில் எகிப்து பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை குறைபாடுகளாக சுட்டுக்காட்டி சிறுமைப்படுத்திய முஹம்மது அன்வர் அல் சடத்தின் எம்.பி. பதவியை பறிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்மீது 596 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவரை நீக்கம் செய்யும் முடிவை ஆதரித்து 468 பேரும், எதிராக இதர எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்றத்தை விட்டு முஹம்மது அன்வர் அல் சடத் உடனடியாக வெளியேறினார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘உலகம் இத்துடன் முடிந்துப் போய் விடாது’ என்று கோபமாக குறிப்பிட்டார்.
எகிப்து நாட்டில் அழகிய நைல் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மொனோபியா பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இவர் பணியாற்றி வந்தார். அன்வர் அல் சடத்தின் பதவி நீக்கத்துக்கு பிறகு காலியாகிவிட்ட இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




