இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஆடம்பர பங்களா உள்ளிட்ட சொகுசு வசதிகளை பெற வேண்டாமென கடிதம் மூலம் கோரியுள்ளார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
இரா.சம்பந்தனிற்கு, “தயவுசெய்து திரும்பிப் பாருங்கள்“ என்ற தலைப்பில் இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில்-
தங்களுடனும், எமது மக்களுடனும் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சார்பாக எனது கருத்தைத் தெரிவிக்காது அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இதை அவசரஅவசரமாக எழுதும் நோக்கம், எமது மக்களை நேரடியாகப் பாதிப்பதால் உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றுமாறு ஆலோசனை வழங்குவதற்காகவே!
நாம் இருவருக்கும் பல விடயங்களில் பொதுவானதாக இருப்பதை ஒத்துக் கொள்வீர்கள் எனநம்புகிறேன். நாம் ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே மொழியைப் பேசுகின்ற, இந்துமதத்தைப் பின்பற்றுகின்ற, ஒரே அரசியற்கட்சியில் இருந்தவர்களாவோம். நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினராவேன். ஆனால் நீங்கள் அதில் 1977ஆம் ஆண்டுதான் இணைந்துகொண்டீர்கள்.