சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக, சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பைனான்சியர் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால், விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததால், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் போத்ரா வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவதூறு வழக்கை மீண் டும் விசாரிக்கும்படி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும் ரஜினி ஆஜராக உத்தரவிடலாம் எனவும் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வரும் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார்.