Saturday , April 19 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கம்மலை அடகுவைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!

கம்மலை அடகுவைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்துவிட்டு எர்ணாகுளம் செல்கிறார், அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாகச் செல்லாத நான், எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வெழுதப்போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார்.

நீட் தேர்வுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெளிமாநிலத்தில் நீட் தேர்வெழுத மாணவர்கள் தற்போது வெளிமாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஹேமாவின் அப்பாவும் அம்மாவும் தினம் வேலைக்குச் சென்றுதான் வாழ்க்கை நடத்திவருகின்றனா். இவருக்கும் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக்கொண்டிருந்த மாணவி ஹேமாவிடம் பேசினோம்., ”நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனக் கடந்த ஆண்டு போராடினார்கள். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை இங்கு நடத்துங்கள் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நீட் தேர்வுக்கு ஆன்லைனில் அப்ளை செய்யும்போது முன்னுரிமை மையமாகத் தமிழகத்தில் உள்ள மையங்களைத்தான் குறிப்பிட்டேன். ஆனால், எங்களுக்கு கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் அறிமுகமில்லாத, தெரியாத மொழி பேசக்கூடிய நகரில் தேர்வு எழுதச் செல்வது எனக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு எர்ணாகுளத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தனியாக அரியலூர் பேருந்து நிலையத்திற்கே செல்லாதவள். ஆனால், எர்ணாகுளம் எப்படி செல்லப்போகிறேன் என்றுதெரியவில்லை, அதுமட்டுமில்லாமல், எங்கள் அப்பா அம்மாவுக்கு ஊர் உலகம் தெரியாது. அவர்களை அழைச்சிக்கிட்டு எப்படி போகப்போகிறேன்னு தெரியல. இவ்வளவு பிரச்னைகள் மத்தியில் என்னுடைய அம்மாவின் கம்மலை அடகு வைத்துவிட்டுத் தேர்வு எழுதச் செல்கிறேன். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை என்று ஆதங்கத்தோடு முடித்தார்.

அவரின் பெற்றோர் கூறும்போது.,“தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் படிக்க வைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையங்களில் சேர்வதற்கு அதிக அளவில் பணம் செலவுசெய்துள்ளோம். ஆனால், தற்போது தேர்வு எழுதச் செல்லவும் செலவு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எர்ணாகுளத்துக்குச் செல்ல செலவுக்குப் பணம் இல்லாமல், காதில் கிடந்த தோட்டை அடகு வைத்துதான் செல்லவேண்டிய நிலையில் உள்ளோம்” எனக் கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv