நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சிமன்றத் திருத்தச் சட்டமூலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் யோசனைகள் புறக்கணிக்கப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
சௌமிய பவனில் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புதிய எல்லை மீள் நிர்ணயம் எந்தவகையிலும் மலையக மக்களின் அரசியல் ரீதியிலான உரிமைகளை பாதுகாப்பதாக தெரியவில்லை. தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையில் இருக்கும் சில அனுகூலங்கள் புதிய கலப்புத் தேர்தல் முறை மூலம் இல்லாமல் போகும்.
60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 சதவீதம் விகிதாசார ரீதியிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அது மலையக மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யாது.
நுவரெலியா மாவட்டத்தை தவிர்த்து பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை , கண்டி போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே இருந்து வரும் எமது பிரதிநிதித்துவங்கள் இழக்க நேரிடுமாயின் அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மலையக மக்களின் மனக்கிலேசம் தீர்க்கும் வகையில் சட்டமூலத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.