20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயன்றால் அதற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாக பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள ஏனைய விளக்கங்கள் வருமாறு,
20ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தேவை.
இந்தத் திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அரசு இம்மாதம் மூன்றாம் திகதி வெளியிட்டுள்ளது. அந்தத் தினத்திலிருந்து இரண்டு வாரங்களின் பின்னர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.
அதன்படி ஓகஸ்ட் 17 இற்குப் பின் எந்த நேரமும் அது நடக்க இடமுண்டு. அவ்வாறு நடந்தால் உடனடியாக நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு செல்வோம்.
20ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என்பதே எங்களது ஆணித்தரமான நிலைப்பாடு.
அதைச் செய்யாமல் அரசு குறுக்கு வழியில் அரசமைப்பைத் திருத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.