அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு கட்சியை சேர்ந்த 2 செனட்டர்கள் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை முன் மொழிந்துள்ளனர்.
அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் இது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இளைஞர்களாகவும், நன்கு படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவராக இருத்தல் அவசியம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு குடியுரிமை வழங்கப்படும்.
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் இதே முறையில் தான் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தற்போது அமெரிக்காவிலும் பின்பற்றப்பட உள்ளது.
விண்ணப்பதாரர் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு பட்டப்படிப்பு படித்திருந்தால் 1 புள்ளி. வெளிநாட்டில் இளங்கலை பட்டம் படித்திருந்தால் 5 புள்ளிகள், அமெரிக்காவில் இளங்கலை பட்டம் படித்திருந்தால் 6 புள்ளிகள் வழங்கப்படும்.
‘ஸ்டெம்‘ பிரிவில் வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பெற்றிருந்தால், 7 புள்ளிகளும், அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் 8 புள்ளிகளும் கிடைக்கும்.
மேலும் வெளிநாட்டில் ஆராய்ச்சி கல்வி பட்டம் பெற்றிருந்தால் 10 புள்ளிகளும், அதே பட்டத்தை அமெரிக்காவில் பெற்றிருந்தால் 13 புள்ளிகளும் கிடைக்கும்.
மேற்கண்ட தகுதிகளுடன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு ‘எச் 1-பி’ விசா மூலம் செல்கின்றனர். முன்பு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.