முதலமைச்சர் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”2013ஆம் ஆண்டு முதலமைச்சர் என்னிடம் அமைச்சுப் பொறுப்பை எவ்வாறு நேர்மையாகத் தந்தாரோ அதே போன்று இன்று வரையிலும் அந்த அமைச்சு பொறுப்பிற்கு எந்த வித கலங்கமும் இன்றி தூசுகளும், மாசுகளும்படாத வகையில் பாதுகாத்து வந்துள்ளேன்.
எனவே முதலமைச்சர் அவர்கள் தற்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள், ஒட்டு மொத்தத்தில் மக்கள் ஒற்றுமையாக இருப்பதினை சீர் குலைப்பதாகவும், இருக்கின்ற பங்காளிக்கட்சிகள் பிளவு படுகின்றது போன்றும் காணப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பின்னரும், அதனை தொடர்ந்த இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்ல கூறியமையானது பிழையான விடையமொன்றாக காணப்படுகின்றது.
தற்போது மீன்பிடி போக்கு வரத்து அமைச்சரான என்னை இராஜினாமா செய்யுமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பதாக நான் ஊடகங்கள் மூலமாக அறிகின்றேன்.
அவ்வாறு அவர் கேட்பாராக இருந்தால் நான் இராஜினாமா கடிதத்தை வழங்க தயார் இல்லை.முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயண்படுத்தி இன்றைய தினமே என்னை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க முடியும்.
அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் ஒரு சட்டத்தரணியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இதற்கு பின்னால் இருக்கின்ற நியாய பூர்வமான விடயங்கள் என்ன? குறிப்பாக யார் யார் என்ன பிழை விட்டிருக்கின்றார்கள்? முதலமைச்சர் அல்ல இருக்கின்ற பலர் தொடர்பான விடயங்களை கூறுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
தற்பொது சில விடயங்கள் கட்சி ரீதியாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆகவே அமைச்சுப்பொறுப்பிற்காகவே நான் போராடுகின்றேன் என்று யாரும் நினைத்து விடக்கூடாது” என அவர் தெரிவித்தார்.