மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து 10வது நாளாக நீடித்து வந்தது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 22 லட்சம் லாரிகள் ஓடவில்லை.
இதன் காரணமாக சரக்குகள் ஆங்காங்கே தேக்கம் அடைந்தன. காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு தினமும் ரூ.7,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் மத்திய அரசுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. காப்பீடு பிரீமிய உயர்வு 27 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.