கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்போது மக்கள் சுதந்திரமாக செயல்படும் நிலையை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹற்றன் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு நாடாளுமன்ற நிறைவையொட்டி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றினணந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும்.
நாடு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் தீர்மானிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுகின்றது.
கடந்த காலத்தில் நமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு அதிகளவு பணங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உமாஓயா பல்நோக்கு திட்டம், ஹாம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி என மேற்கொள்ளப்பட்டமைக்கு அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக பல அர்ப்பணிப்பூடான செயற்பாடுகளை செய்து வருகின்றோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.