வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க முடிவு செய்ததை அடுத்து அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா செயல்படுவதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.
இதனால் ரஷியாவுக்கும் இதே போல் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.
இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகியவற்றில் நிறை வேறியது.
இதைத்தொடர்ந்து இந்த மசோதா மீது அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனால் 3 நாடுகள் மீதான பொருளாதார தடை அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷிய பிரதமர் திமித்ரி மெட்வதேவ் கூறியதாவது:-
அமெரிக்கா எங்கள் நாடு மீது முழுமையான வர்த்தக போரை தொடங்கி உள்ளது. அது மட்டும் அல்லாமல் எங்கள் நாட்டை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவுடனான எங்களுடைய நட்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது, இருநாடுகளின் உறவை கடுமையாக பாதிக்கும். அது மட்டும் அல்ல, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு மீது எங்களுக்குள்ள நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா எங்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் இப்போது மட்டும் அல்ல, இன்னும் பல 10 ஆண்டுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு திமித்ரி மெட்வதேவ் கூறினார்.
ஈரான் இதுபற்றி கூறும்போது, நாங்கள் அணுசக்தி சம்பந்தமாக அமெரிக்காவுடன் சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருந்தோம். இப்போதைய தடையால் இதற்கு பாதிப்பு ஏற்படும். இந்த தடைக்கு பின்னால் ஏற்படும் பல்வேறு தாக்கங்களுக்கும் அமெரிக்காதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வடகொரியா தன் நாடு மீதான பொருளாதார தடைக்கு இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.