புதிய அரசியலமைப்பில் ஒரு வார்த்தை கூட இதுவரை உருவாக்கப்படவில்லை. ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படுகின்றது எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு இணைப்பைக் கைவிடுதல், ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தல் போன்ற விடயங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் கோரப்படும்.
இதனால் நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.