2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
பரீட்சைக்குத் தோற்றிய 73.05 வீதமான மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை இம்முறை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா – ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி – மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி – மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை – சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி – சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகிய ஒன்பது மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம்; அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.
பெறுபேறுகளின் பிரகாரம் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரயில் 9ஏ சித்திகளை 26 மாணவர்களும், 8ஏ சித்திகளை 20 மாணவர்களும் பெற்றதுடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை விசேட அம்சமாகவுள்ளது.
பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.