உரிமைக்காக போராடி, அனைத்தையும் இழந்து உயிரை மாத்திரம் தக்கவைத்துக்கொண்டும், இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் அகதிகளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராமல் இந்த அகதிகள் தினத்திலும் வழமைபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எமது மக்கள்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் சர்வதேச அகதிகள் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம் மற்றும் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 1983ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் ஏற்பட்ட ஆயுத மோதல் காரணமாக மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருந்த நிலையில், யுத்த முடிவினையடுத்து பலர் நாடு திரும்பியுள்ளனர். எனினும், இன்னும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் தாயகம் திரும்புவதற்காய் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
யுத்த சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்து கடந்த மூன்று தசாப்த காலமாக வவுனியாவில் நலன்புரி முகாம்களில் பல்வேறு இன்னல்களுக்கும், விலங்கினங்களின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அகதி வாழ்க்கை வாழ்ந்த மக்களுக்கு அண்மையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை வீடுகளை அமைத்துக் கொடுத்து, அம் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லிணக்கம் குறித்து பேசிவரும் நிலையிலும், இன்னமும் பூரணமாக குடியேற்றப்படவில்லை என்பது வேதனையான விடயமே.
குறிப்பாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு மாதக்கணக்கில் போராடி வருகின்ற நிலையில், அம் மக்களை அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது அம் மக்களின் ஆதங்கமாக உள்ளது. அத்தோடு, கிளிநொச்சியில் முகமாலை மேற்கு மற்றும் இரணைதீவு மக்களும் விரைவில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி வருகின்றனர்.
அகதிகளின் மறுவாழ்வு குறித்து சர்தேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆணையம் என்பன செயற்பட்டு வருகின்றன. அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன என்கின்ற போதிலும், இலங்கையில் உரிய சூழல் காணப்பட்டும் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்பது மக்களின் வேதனையாக உள்ளது.
யுத்தத்தால் தமது சொத்துக்களையும் சொந்தபந்தங்களையும் இழந்த மக்களுக்கு, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக சுனாமி பாரிய இடியாக விழுந்தது. இந்த இரு பெரு அழிவுகளாலும் உடலாலும் உள்ளத்தாலும் ரணமாகிப் போயுள்ள இம்மக்கள் அகதி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சுமூகமாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதே இந்த அகதிகள் தினத்தில் அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.