முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும்.” எனக் கூறினார்.
மேலும், ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் வெளிப்படையான தன்மையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்த ராவத், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராணுவ உபகரணங்களில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி பேசினார். ராணுவம் எந்த சூழ்நிலையிலும், எந்த கால நிலையிலும் சிறப்பாக செயல்பட தேவையான கருவிகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ராணுவ வடிவமைப்பு பிரிவின் இந்த அறிக்கையின் முதல் தொகுப்பு கடந்த 2015-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதற்கு பின்னர், ராணுவம் பயன்படுத்தும் கருவிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவையான நவீன உபகரணங்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.