அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இதனால், இந்தியா மீது சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 இந்திய பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சூட்டியுள்ளதாகவும், அவை தனக்குச் சொந்தமானவை எனவும் கூறி, சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீன மற்றும் ரோமானிய எழுத்துகளை கலந்து, Wo’gyainling, Mila Ri, Qoidengarbo Ri, Mainquka, Bumo La and Namkapub Ri ஆகிய பெயர்களை அந்நாடு சூட்டியுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, தெற்கு திபெத் என அழைக்கப்படும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நாடு விரைவில் வரைபடம் ஒன்றையும் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.