பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழ்வது இந்த திருத்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர். இதையடுத்து, 200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவின்படி 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். 2 ஐஜிக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று ஏற்றப்படும் மகா தீபமானது 11 நாட்கள் வரை எரியும்.