Monday , June 9 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி

தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி

தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நீதிமன்ற ஆணைகளையும், சட்டத்தையும் மதிக்காத ஆட்சி நடக்கும் மாநிலத்திற்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது.

நாட்டுநலன் மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்காக பாமக ஏராளமான சட்டப் பேராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. பாமக தொடர்ந்த வழக்குகளின் பயனாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன.

அதன்தொடர்ச்சியாக நாடு முழுவதும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 2700 மதுக்கடைகள் அடுத்த மாதத்திற்குள் மூடப்பட வேண்டும்.

அதற்கு முன்பாகவே சில முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவுகளை தமிழக அரசு இன்று வரை செயல்படுத்தவில்லை.

”தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளுக்கான வழிகாட்டி பலகைகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளப்பரப் பலகைகள் தடை செய்யப்படுகின்றன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என்று கடந்த 15.12.2016 அன்று அளித்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

அதன்படி தீர்ப்பு வெளியான நாளில் அனைத்து அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகைகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் பலமுறை நினைவூட்டல்கள் வழங்கிய பிறகும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது மன்னிக்க முடியாத நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

அதேபோல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ”மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மாநில வருவாய்த்துறை, உள்துறை ஆகியவற்றுடன் கலந்தாய்வு நடத்தி தலைமைச் செயலாளர்களும், காவல்துறை தலைமை இயக்குனர்களும் ஒரு மாதத்தில் தயாரிக்க வேண்டும்.

அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உரிய அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்தப் பொறுப்பை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை பெற்று கண்காணிக்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் கூட்டம் இன்று வரை நடக்கவில்லை.

தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரை பாமக செய்தித் தொடர்பாளர் க.பாலு, பசுமைத்தாயகம் இர.அருள் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களை பாமக வழக்கறிஞர்கள் சந்தித்த போது, மதுக்கடைகளை அகற்றுவது குறித்த செயல்திட்டம் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

தமிழகத்தில் மது குடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 16,000 ஆகும். சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தான் எனும் போது, அந்த விபத்துகளைத் தடுக்கும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு மோசமாக செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒருபுறம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, மற்றொருபுறம் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்து தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

மதுக்கடைகளை அகற்றுவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சென்னையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது.

இப்போராட்டத்தை சென்னையில் வரும் மார்ச் 1-ஆம் தேதி நான் தொடங்கி வைக்கிறேன். மது விலக்குக்கு ஆதரவான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வார்கள். சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இத்தகைய போராட்டம் நடத்தப்படும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

 

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …